அரவிந்தருக்கு அடைக்கலம் தந்த வைஸ்யர் | வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு

7294

சுதந்திர போராட்ட வீரரும் மகாயோகியுமான அரவிந்தர் வங்காளத்தில் நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஒரு வருடம் சிறைச்சாலையில் அவர் இருந்த போது யோகக் கலையைக் தானாகவே கற்றுக்கொண்டார். சிறையிலிருந்து அவர் விடுதலை ஆனவுடன் அவரை எல்லோரும் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பிச்செல்ல ஆலோசனை கூறினார்கள். ஆனால் சிறையில் இருந்த போது அவருக்கு உள்ளிருந்த ஒரு குரல் (சுவாமி விவேகானந்தரே தோன்றி அவருக்கு ஆலோசனை சொன்னதாகவும் கூறுகிறார்கள்) அவரை புதுச்சேரிக்கு செல்ல ஆணையிட்டது.

அதன்படியே அவர் புதுவைக்கு 4.4.1910 ஆம் ஆண்டு வந்தார். அவரை புதுவையில் கோமிட்டி வீதியில் உள்ள 63 ஆம் நம்பர் வீட்டிற்கு போக சொன்னது மீண்டும் உள்ளிருந்து வந்த குரல்.

அவ்வாறே அந்த வீதியில் உள்ள வீட்டிற்குச் சென்றார் அரவிந்தர். அந்த வீட்டின் நீண்ட திண்ணையில் அமர்ந்தார். அந்த வீடு சங்கர செட்டியாருக்கு சொந்தமானது. சமீபத்தில் அவர் வீட்டிற்கு வந்த யோகி ஒருவர் செட்டியார் உங்கள் வீட்டிற்கு ஒரு மகான் வருவார் அவர் பல அதிசயங்களை நிகழ்த்த இருக்கிறார் அவரை நாம் உத்திரயோகி என்று அழைக்கலாம் என கூறியிருந்தார். அது அவரின் நினைவிற்கு வந்தது. அரவிந்தர் ஹிந்தியில் பேசியதால் அப்பொழுது புதுவையில் தங்கியிருந்த பாரதியாரை உதவிக்கு அழைத்தார் சங்கர செட்டியார். பாரதியும் சங்கர செட்டியாரும் நண்பர்கள். பாரதி வந்து அரவிந்தரிடம் பேசி விவரம் அறிந்தார்.

செட்டியாரை பார்த்து நீங்கள் எதிர்பார்த்த உத்திரயோகி வந்துவிட்டார் என கூறியதும், செட்டியாருக்கு மிகவும் மகிழ்ச்சி தன் வீட்டில் வியாபாரத்திற்காக கட்டப்பட்டிருந்த பாதாள அறையில் அரவிந்தரை மூன்று நாட்கள் மறைத்து வைத்தார், காரணம் ஆங்கில ஒற்றர்கள் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர்.

உடனே சங்கர செட்டியார், பாரதியார், சீனுவாச ஐயங்கார் ஆகியோர் பிரான்ஸ் அரசாங்கத்திடம் பேசி அரவிந்தர் புதுவையில் தங்க அனுமதி பெற்றனர். எனவே பாதாள அறையிலிருந்து வெளிவந்து அந்த வீட்டின் இரண்டாவது மாடியில் ஆறு மாதங்கள் அரவிந்தர் தங்கியிருந்தாராம்.

ஆங்கில அரசாங்கத்திடமிருந்து அரவிந்தரை காத்த சங்கர செட்டியாரின் வீட்டை 1963 ஆம் ஆண்டு பெருமுக்கல் தசரதன் செட்டியார், ஆசிரமத்தில் இருந்த அன்னையின் ஆதரவோடு இந்த வீட்டை வாங்கியிருக்கிறார்.

காலத்திற்கு ஏற்ப சில மாறுதல்களை அவர் செய்திருக்கிறார். ஆனாலும் இன்றும் அரவிந்தர் தங்கியிருந்த அறையை அப்படியே வைத்திருக்கிறார்கள். தசரத செட்டியாரின் மகன் திரு. ஜவகர் பாபுவும் அவரின் துணைவியார் திருமதி. உஷா ஜவகர் பாபுவும் இந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். இருவருமே அரவிந்தரின் பக்தர்களாக உள்ளனர்.

அரவிந்தர் புதுவைக்கு வந்த தினமான ஏப்ரல் மாதம் நான்காம் தேதியை அரவிந்தர் ஆசிரமம் மிகச்சிறப்பாக கொண்டாடிவருகிறது. அன்று மட்டும் அரவிந்தர் அடைக்கலமான இந்த 63 வைஸ்யாள் வீதியில் உள்ள இந்த வீட்டிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இந்த அறையை தரிசித்து செல்வார்களாம். அதற்கு பெருந்தன்மையாக அனுமதித்திருக்கிறார்கள் இந்த தம்பதியினர்.

Click here and subscribe to hear Powerful Mantra collection by Ekasvara

அது போல் அன்னையை இந்த வீட்டை வாங்க சிலர் தூண்டியபோது அன்னை மறுத்துவிட்டாராம். மகான் அரவிந்தருக்கு அடைக்கலம் அளித்தவர்களின் விருப்பத்திற்கு மாறாக நாம் எதையும் செய்யக்கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டாராம்.

விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு மகாகவி பாரதியாருக்கும் நண்பராக திகழ்ந்தும், மகான் அரவிந்தருக்கு அடைக்கலம் தந்த சங்கர செட்டியாரின் வாரிசுகளை பற்றியும், இப்பொழுது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதையும் அறிய முடியவில்லை.

இந்த தகவல்களை ஒருவேளை அந்த குடும்பத்தார் படிக்க நேர்ந்து தொடர்புகொண்டால் அவர்களைப்பற்றிய விவரங்களுடன் மீண்டும் உங்களைச் சந்திக்க ஆவலாக உள்ளேன்.

திருமதி. உஷா ஜவகர் கூறுவதை கேளுங்கள்

பண்ருட்டி சொ.முத்துக்குமார்

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

1 COMMENT

  1. அருமையான பதிவு. பல முறை புதுவை வந்துள்ளேன். ஆனால் அரவிந்தரின் இந்த தகவல் இன்று தான் தெரிந்து கண்டேன். இது போன்ற முக்கிய தகவல்களை அவ்வப்போது வழங்கும் பண்ருட்டி முத்துகுமார் அவர்களுக்கு என் வணக்கங்கள்.